திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 1,333 ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்-இன்று டெல்லி குழுவினர் ஆய்வு

கலசபாக்கம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 13 33 ஆழ்துளை கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை இன்று டெல்லி குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட கடந்த ஆண்டு கலெக்டர் பா.முருகேஷ் அப்போதைய கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால் ஒரே நேரத்தில் 1,113 பண்ணை குட்டைகள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு உலக சாதனை படைத்தது.

தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் மாவட்டத்தில் 1,333 மழைநீர் சேகரிப்பு மீள் நிரப்பு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி கலசபாக்கம் ஒன்றியத்தில் 85 மழை நீர் சேகரிப்பு மீள் நிரப்பு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தலா ₹50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள இப்பணிகளை இன்று முதல் 3ம் தேதி வரை டெல்லி குழுவினர் ஆய்வு செய்து, பணியின் தன்மை குறித்து அறிக்கை தயார் செய்ய உள்ளனர். இரண்டாவது கட்டமாக மழை நீர் சேகரிப்பு மீள் நிரப்பு பணியில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலூர் ஊராட்சி மதுரா சின்னக்காலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மீள் நிரப்பு கட்டமைப்பு பணிகளை ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்டத்திலேயே கலசபாக்கம் ஒன்றியத்தில் இப்பணியை சிறப்பாக முடித்து சாதனை படைத்து முன்மாதிரி ஒன்றியமாக திகழ    வேண்டுமென அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது பிடிஓக்கள் சத்தியமூர்த்தி, முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியன், காளியப்பன், ஊராட்சித் தலைவர் ஜெயக்கொடிகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் பச்சையப்பன், பணி மேற்பார்வையாளர் அனந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: