கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு 2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரு கோயில்களுக்கு சொந்தமான நிலத்திலிருந்து 198 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் திருடப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கோயில் சொத்துகளில் கனிம வள திருட்டு குறித்தும், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஜூலை 26ம் தேதி விரிவான அறிக்கையுடன் நேரில் ஆஜராகுமாறு சேலம் டி.ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டது. வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் சரக டி.ஐ.ஜி அதிகாரிகளுடன் ஆஜரானார். அதேபோல வருவாய்த்துறை, கனிமவளத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் ஆஜராகினர். அப்போது, கனிமவள கொள்ளையை தடுக்க காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வருவாய் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மக்கள் பணத்தில் இருந்து கண்ணியமான ஊதியத்தை பெறும் அதிகாரிகள், அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் டி.ஐ.ஜி தாக்கல் செய்த அறிக்கை போதுமானது அல்ல.
இரு மாவட்டங்களிலும் கனிம வளங்கள் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களை சேலம் சரக டிஐஜி மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு ஒரு வாரத்தில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வழங்க வேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து சட்ட விரோத குவாரி நடவடிக்கைகளை கண்டறிந்தால், அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது சம்பந்தமாக விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். சட்டவிரோத கனிம வளக் கொள்ளை காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க நடவடிக்கைகளை கனிமவளத்துறை உதவி இயக்குனர் எடுக்க வேண்டும். முறையாக விசாரணை நடத்தாமல் முடிக்கப்பட்ட வழக்குகளை காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: