சர்வதேச கிரிக்கெட் முரளி விஜய் ஓய்வு

சென்னை: இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக ஜொலித்தவர் முரளி விஜய் (38 வயது). குறிப்பாக, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக ரன் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சதம் விளாசி சாதனை படைத்த வீரர்கள் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். தமிழ் நாடு அணிக்காக ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களிலும் விளையாடி முத்திரை பதித்துள்ளார்.

சமீப காலமாக தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தனக்கு வாய்ப்புகளை கொடுத்து ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள விஜய், ‘எனது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் உடன் இருந்து ஆதரவு நல்கிய  ரசிகர்களுக்கும் மிகவும் நன்றி’ என்று சமூக ஊடகம் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், வெளி நாடுகளில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடுவதுடன் கிரிக்கெட்டில் வணிக ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: