அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதிமுக கூட்டணியில் அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையிலும் பாஜ தேர்தலில் போட்டியிடுவதா, அதிமுகவிற்கு ஆதரவளிப்பதா அல்லது தேர்தலை தவிர்ப்பதா என உறுதியாக தெரியாத நிலையிலும் பாமக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டதன் மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளை இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். நாட்டில் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து குரல் எழுப்புவோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவோம் என்றார்.