பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது

சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து, திமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட நிர்வாகிகள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள்- நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்ட செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்க உதவ வேண்டும்.
* நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.
* ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி தாராளமாக அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது.

The post பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: