ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ் நாடு: அஜித் ராம் அசத்தல் பந்துவீச்சு

சென்னை: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ் நாடு அணி 59 ரன் வித்தியாசத்தில் வென்றது.சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ் நாடு முதல் இன்னிங்சில் 324 ரன் குவித்தது. இந்திரஜித் 66, விஜய் ஷங்கர் 53, ஷாருக் கான் 50, சுதர்சன், அபராஜித் தலா 45 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 132 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தமிழ் நாடு அணி, நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 133 ரன்னுக்கு சுருண்டது (36.1 ஓவர்).

ஜடேஜா 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 266 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் மட்டும் 18 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. கை வசம் 9 விக்கெட் இருக்க, வெற்றிக்கு 262 ரன் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை விளையாடிய சவுராஷ்டிரா, அஜித் ராம் மற்றும் மணிமாறன் சித்தார்த்தின் அமர்க்களமான பந்துவீச்சில் 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (68.2 ஓவர்). கடைசி வரை போராடிய தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் 101 ரன் (205 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார்.

சிராக் 13, அர்பித் 45, ரவீந்திர ஜடேஜா 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். தமிழ் நாடு பந்துவீச்சில் அஜித் ராம் 6, மணிமாறன் 3, சந்தீப் வாரியர் 1 விக்கெட் வீழ்த்தினர். தமிழ் நாடு அணி 59 ரன் வித்தியாசத்தில் வென்றது. 2 இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றிய அஜித் ராம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லீக் சுற்று நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பி பிரிவில் சவுராஷ்டிரா, ஆந்திரா, மகாராஷ்டிரா அணிகள் தலா 26 புள்ளிகள் பெற்றாலும்... ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த சவுராஷ்டிரா, ஆந்திரா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

மும்பை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டிரா செய்து 3வது இடம் பிடித்த மகாராஷ்டிரா ஏமாற்றத்துடன் வெளியேறியது. மும்பை (24 புள்ளி), தமிழ் நாடு (21), டெல்லி (17), அசாம் (11), ஐதராபாத் (1) அணிகள் அடுத்த இடங்களை பிடித்தன. ஜன. 31ல் தொடங்கும் காலிறுதி ஆட்டங்களில் பெங்கால் - ஜார்க்கண்ட், சவுராஷ்டிரா - பஞ்சாப், கர்நாடகா - உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் - ஆந்திரா அணிகள் மோதுகின்றன.

Related Stories: