மும்பை: நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் ெதாடர்பான அறிக்கையை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டதால், இரண்டாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவை சேர்ந்த பிரபல அதானி குழுமம் கடந்த பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது. வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது’ என்று பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது.
இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,000 கோடி அளவிற்கு வேகமாக சரிந்தது. 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் அதானி 3ம் இடத்தில் இருந்தார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால், 4ம் இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார். இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது.