சென்னை: ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன. சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ள சவுராஷ்டிராவும், காலிறுதி வாய்ப்பை இழந்து விட்ட தமிழ்நாடும் மோதுகின்றன. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 142.4ஓவரில் 324 ரன் குவித்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 35 ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 92ரன் எடுத்தது. சவுராஷ்டிரா 232ரன் பின்தங்கிய நிலையில், களத்தில் இருந்த சிராக் ஜானி 14, சேத்தன் சக்காரியா 8ரன்னுடன 3வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.
தமிழ்நாடு வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத கேப்டன் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர். பொறுமையுடன் விளையாடிய சிராக் 49ரன்னில் வெளியேற சவுராஷ்டிராவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 79.4ஓவரில் 192ரன்னுக்கு சரண்டரானது. தர்மேந்திர சிங் மட்டும் 22 ரன்னுடன் களத்தில் இருந்தார். தமிழக வீரர்கள் சித்தார்த், அஜித்ராம் தலா 3, வாரியர் 2, அபராஜித், ரஞ்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 132ரன் முன்னிலையில் தமிழ்நாடு 2வது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது.