ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாட்டை சுருட்டிய ஜடேஜாக்கள்: சரண்டரான சவுராஷ்டிரா

சென்னை: ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் கடைசி சுற்று லீக்  ஆட்டங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன. சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ள சவுராஷ்டிராவும், காலிறுதி வாய்ப்பை இழந்து விட்ட  தமிழ்நாடும் மோதுகின்றன. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 142.4ஓவரில் 324 ரன் குவித்தது. அதனையடுத்து  முதல் இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா அணி  2வது நாள் ஆட்ட நேர முடிவில்   35 ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 92ரன் எடுத்தது. சவுராஷ்டிரா   232ரன் பின்தங்கிய நிலையில், களத்தில் இருந்த  சிராக் ஜானி 14,  சேத்தன் சக்காரியா 8ரன்னுடன 3வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.

தமிழ்நாடு வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத  கேப்டன் ரவீந்திர ஜடேஜா  உள்ளிட்ட வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர். பொறுமையுடன் விளையாடிய சிராக்  49ரன்னில் வெளியேற சவுராஷ்டிராவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 79.4ஓவரில் 192ரன்னுக்கு சரண்டரானது.  தர்மேந்திர சிங் மட்டும் 22 ரன்னுடன் களத்தில் இருந்தார். தமிழக வீரர்கள்  சித்தார்த், அஜித்ராம் தலா 3, வாரியர் 2,  அபராஜித், ரஞ்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 132ரன் முன்னிலையில் தமிழ்நாடு 2வது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது.

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்த நிலையில் தர்மமேந்திர  ஜடேஜா, ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சை தாக்குப் பிடிக்காமல் தமிழ் நாடு வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அதனால் தமிழ்நாடு 36.1ஓவரில் 133ரன்னுக்கு சுருண்டது.  அணியில் அதிகபட்சமாக  சாய் சுதர்சன் 37, பாபா இந்தரஜித் 28ரன் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 7, தர்மேந்திர ஜடேஜா 3 விக்கெட்களை அள்ளினர்.

அதனையடுத்து 266ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சவுராஷ்டிரா. அந்த அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 4ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4ரன் எடுத்திருந்தது. சித்தார்த் ஒரு விக்கெட் எடுத்தார். இன்னும் 9 விக்கெட்களும், ஒருநாள் ஆட்டமும் மிச்சமிருக்க இன்னும் 262ரன் எடுத்தால் வெற்றி, காலிறுதி வாய்ப்பு என்ற இலக்குகளுடன் சவுராஷ்டிரா கடைசி நாளான இன்று களம் காண உள்ளது.

Related Stories: