இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள பெருமாதுறை பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஜசீர் (26). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கொல்லம் அருகே உள்ள குண்டரா பகுதியை சேர்ந்த ஒரு பிளஸ் 1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து சாட்டிங் செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவியை நேரடியாக பார்க்க வேண்டும் என்று ஜசீர் கூறி இருக்கிறார்.

மாணவியும் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஜசீர், ஒரு காரில் குண்டராவுக்கு சென்றுள்ளார். அன்றைய தினம் மாணவி வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வழியில் காருடன் காத்திருந்த ஜசீர், மாணவியை காரில் ஏற்றி திருவனந்தபுரம் அருகே பாலோடு என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதற்கிடையே பள்ளி சென்ற மாணவியை காணாததால் அவரது பெற்றோர் பதற்றமடைந்தனர்.

உடனே குண்டரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பரிசோதித்து பார்த்துள்ளனர். அவருக்கும், ஜசீருக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மாணவியை ஜசீர் பாலோட்டில் உள்ள வீட்டில் அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்தனர்.

மாணவியை மீட்டு ஜசீரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த பெருமாதுறை பகுதியை சேர்ந்த நவுபல், நியாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜசீர் மீது 4 கிரிமினல் வழக்குகளும், நவுபல் மீது 10க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளும் உள்ளன. விசாரணைக்கு பிறகு 3 பேரையும் போலீசார் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: