சுயமரியாதையை விட்டுக்கொடுத்து கமலாலயத்தில் காத்திருக்கும் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு

சென்னை: தேர்லுக்கு ஆதரவு பெற வேண்டும் என்பதற்காக, ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு பேரும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலய வாசலில் காத்து கிடக்கின்றனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார். சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரிலான சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து, 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

பிறகு, திருமணத்தை நடத்தி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நேரு ஸ்டேடியம் கட்டும்போது அப்புறப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் கண்ணப்பர் திடலில் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஏறச் சென்றார்கள். ஆனால், அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை. கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன். ஆனால், சட்டமன்றத்தில் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என  ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால், நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில்தான் இருந்தது. இரண்டு பேரும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: