சூலூர் அருகே தப்பி செல்ல முயன்றபோது தங்கையின் காதலனை கடித்து காரை உடைத்த அண்ணன்: கைதுக்கு பயந்து அவருக்கே திருமணம் செய்து வைத்த பெற்றோர்

சூலூர்: கோவை மாவட்டம், சூலூர் அருகே ஜல்லிபட்டியை சேர்ந்தவர் 28 வயது விவசாயி. இவரது தூரத்து உறவினரின் மகள் சூலூர் பகுதியில் வசிக்கிறார். இருவரும் 2 ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்ய முடிவு செய்தனர்.  மாட்டு பொங்கலன்று இரவு 8 மணி அளவில் காதலி வீடு உள்ள பகுதிக்கு காரில் வந்துள்ளார் காதலன். தயாராக இருந்த காதலி, பெட்டியுடன் வந்து காரில் ஏறி உள்ளார். இது தெரிந்த அவரது அண்ணன், நண்பர்களுடன் சேர்ந்து காரை துரத்தி பிடித்து நிறுத்தி தங்கையின் காதலனை சரமாரியாக தாக்கியதுடன் கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினார்.

பின்னால் வந்த காதலியின் தந்தையும் காரின் கண்ணாடியை  உடைத்துள்ளார். பின்னர் கட்டி புரண்டு சண்டையிட்டதோடு அவரது காதை காதலியின் அண்ணன் கடித்து துப்பினார். அவரை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு பயந்து காதலியின் பெற்றோர் காவல் நிலையம் சென்று தாங்கள்  செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டுள்ளனர்.

புகார் வந்தால் கைது செய்வோம் என போலீசார் கூறிவிடவே, ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ என உறவினர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் பெண்ணின் பெற்றோர், காதலன் குடும்பத்தினரிடம் சமரசம் பேசியுள்ளனர். இதில் உடன்பாடு எட்டவே பெண்ணை காதலனுக்கே திருமணம் செய்து வைக்க சம்மதித்து திருமணத்தையும் நடத்தி முடித்தனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: