பட்டா வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.3 லட்சம் அபேஸ்: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: புழல், ஒத்தவாடை தெருவை  சேர்ந்தவர் வனஜா (71). இவர், சென்னை அண்ணாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘புழல் பகுதியில் தனது பயன்பாட்டில்  22 சென்ட் நிலம் உள்ளது. அதற்கு பட்டா பெறுவதற்காக கடந்த 2021ம் ஆண்டு, மாதவரம் தாலுகா அலுவலகத்துக்கு சென்றபோது, சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளையராஜா என்பவர் அறிமுகமானார். அவர், தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகளை எனக்கு தெரியும்.

சென்னை கலெக்டர் எனக்கு நெருக்கமான நண்பர் என்றும், ரூ.5 லட்சம் கொடுத்தால், ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு பட்டா வாங்கித் தருகிறேன், என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், முன்பணமாக ரூ.3 லட்சத்தை கொடுத்தேன். ஆனால், இதுவரை பட்டா வாங்கி தரவில்லை. எனவே, நான்   ரூ.3 லட்சத்தை திருப்பி கேட்டேன். ஆனால், தர மறுத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவரிடமிருந்து ரூ.3 லட்சத்தை பெற்று தர வேண்டும்,’ என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அண்ணா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: