10ம் வகுப்பு மாணவி கடத்தி சிறை வைப்பு: வாலிபர்களுக்கு வலை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 10ம் வகுப்பு மாணவியை கடத்தி வீட்டில் சிறை வைத்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் மாயம் ஆனார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி கடைசியாக சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவி ஆட்டோவில் செல்லும் காட்சிகள் சிக்கின. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவியின் தோழிகளிடம் விசாரித்த போது, வாலிபர் ஒருவரை காதலித்த தகவலும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் தேட தொடங்கினர். அவர் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை மாணவி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு வந்து ஆஜர் ஆனார். மாணவியிடம் நடந்த விசாரணையில் தனக்கு பழக்கமான வாலிபர் தன்னை திருநெல்வேலிக்கு பஸ்சில் அழைத்து சென்றதாகவும், பின்னர் நாகர்கோவில் அழைத்து வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து தன்னை ஆட்டோவில் ஏற்றி கன்னியாகுமரிக்கு அனுப்பியதாக கூறினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மாணவியை அழைத்து சென்றதாக கூறப்படும் வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.

The post 10ம் வகுப்பு மாணவி கடத்தி சிறை வைப்பு: வாலிபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: