ஜெகதீசன் அபார சதம் தமிழ் நாடு ரன் குவிப்பு

சென்னை: அசாம் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ் நாடு முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ் நாடு முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் களமிறங்கினர். சுதர்சன் 2 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த அபராஜித் 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஜெகதீசன் - கேப்டன் இந்திரஜித் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. ஜெகதீசன் சதம் விளாச, இந்திரஜித் அரை சதம் அடித்தார்.

இருவரும்  3வது விக்கெட்டுக்கு 157 ரன் சேர்த்தனர். இந்திரஜித் 77 ரன் (113 பந்து, 8 பவுண்டரி), ஜெகதீசன் 125 ரன் (152 பந்து, 14 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 5வது விக்கெட்டுக்கு பிரதோஷ் ரஞ்சன் பால் - விஜய் ஷங்கர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்க்க, முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ் நாடு 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்துள்ளது (90 ஓவர்).

பிரதோஷ் ரஞ்சன் 99 ரன், விஜய் ஷங்கர் 53 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மும்பை 293: அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 293 ரன் குவித்து ஆல் அவுட்டானது (79.2 ஓவர்). பிரித்வி ஷா 40 ரன், சர்பராஸ் கான் 125 ரன் (155 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்), பிரசாத் பவார் 25, ஷாம்ஸ் முலானி 39, தணுஷ்கோடியன் 17* ரன் எடுத்துனர்.  டெல்லி பந்துவீச்சில் பிரான்ஷு விஜய்ரன் 4, ஹர்ஷித் ராணா, யோகேஷ் ஷர்மா தலா 2, திவிஜ் மெஹ்ரா, ஹ்ரித்திக் ஷோகீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 2ம் நாளான இன்று டெல்லி அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாட உள்ளது.

Related Stories: