சென்னை: எம்ஜிஆர் 106வது பிறந்த நாளையொட்டி அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர் மறைந்த பிறகும், ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு மேல் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். தனது திரைப்பட பாடல்கள், வசனங்கள், கதைகள் மூலமாக இயக்கத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை கிராமங்கள் தோறும் சென்றடையச் செய்து அடித்தட்டு மக்களின் ஆதரவை பெற்றவர். பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்து அதை சிறப்புற செய்தது, 48 சதவீத இட ஒதுக்கீட்டை 68 சதவீதமாக மாற்றியமைத்தது போன்ற பல சிறந்த நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். அவரது பிறந்த நாளான இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றுவோம்.