உத்தரபிரதேசத்தில் கணவனை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவி

நொய்டா: உத்தரபிரதேசத்தில் கணவனை கொன்று செப்டிங் டேங்கில் மறைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் கவுதம் புத்த நகர் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் 42 வயதுடைய ஒருவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் மாயமான சதீஷ் பால் (42) என்பவரின் சடலம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி விஷால் பாண்டே கூறுகையில்:

சாக்கடை கால்வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சதீஷ் பாலின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் அவரது மனைவி நீது, கடந்த 2ம் தேதி முதல் தனது கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். தொடர் விசாரணையில் நீதுவுக்கும், காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதனை சதீஷ் பால் கண்டித்துள்ளார். அதனால் சதீஷ் பாலை கொன்றுவிட இருவரும் திட்டமிட்டனர்.

குடிபழக்கம் கொண்ட சதீஷ் பாலுக்கு, கடந்த 1ம் தேதி மதுவில் போதை மாத்திரையை கலந்து கொடுத்தனர். பின்னர் சதீஷ் பாலின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். தொடர்ந்து வீட்டின் சாக்கடை கால்வாய் தொட்டியில் சடலத்தை மறைத்து வைத்திருந்தனர். கைதான கள்ளக்காதலன் ஹர்பால், கொத்தனார் என்பதால் அவருடன் பணிபுரியும் மற்றொருவரின் துணையுடன் கொலை செய்துள்ளனர். தற்போது நீதுவும், ஹர்பாலும் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை தேடி வருகிறோம். சதீஷ் பாலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: