தமிழகம் மாளிகை பூங்கா தொட்டிகளில் மலர் செடிகள் நடவு பணி துவக்கம்

ஊட்டி : தமிழகம் மாளிகை பூங்கா தொட்டிகளில் ஜெரோனியம் மலர் செடிகள் நடவு பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழா கொண்டாடப்படுகிறது.

இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதுதவிர ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவைகளும் தயார் செய்யப்படுகிறது.

கோடை சீசன் நெருங்கிய நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நடவு பணிகள் நடந்து வருகிறது.

இதேபோன்று தமிழகம் மாளிகையிலும் தற்போது தொட்டிகளில் நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. 3 மாதங்களுக்கு பின் மலரக்கூடிய ஜெரோனியம் வகை மலர் செடிகள் தற்போது நடவு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பல்வேறு வகையான மலர் செடிகளும் நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளில் வரும் மே மாதம் மலர்கள் அனைத்தும் பூத்து காணப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: