கோத்தகிரி அரவோனு பகுதி பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை

கோத்தகிரி : கோத்தகிரி அரவோனு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழனி மலை முருகன் கோயிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பழனி மலை முருகன் கோயிலில் ஜனவரி மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இதையொட்டி கோத்தகிரி பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்று முருக பெருமானை வழிபட்டு வருவது வழக்கம்.

 இதன்படி நேற்று காலை 10 மணிக்கு அரவோனு கடை வீதி பகுதியில் உள்ள பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பில், அதன் குருசாமி துரை தலைமையில் தொடர்ந்து 29 வது ஆண்டாக  அரவோனு, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள் உள்பட சுமார் 100 பேர் நேற்று பாத யாத்திரையாக, காவடிகள் ஏந்தி பழனி மலைக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக, அரவோனு சக்தா மாரியம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் பாதயாத்திரையாக சென்றால் பழநி முருகன் கோயிலை சென்றடைய சுமார் 6 நாட்கள் தேவைப்படும். பாதயாத்திரையாக சென்று முருக கடவுளை வழிபட்டு திரும்புவது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என தெரிவித்தனர்.

Related Stories: