பெரம்பூர்: வியாசர்பாடியில் போலி நகையை அடகு வைத்து, நூதன முறையில் ரூ.1 லட்சத்தை ஏமாற்றிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் குமரன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (47). இவர், வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியில் சொந்தமாக அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 3ம் தேதி மாலை ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் 28 கிராம் மதிப்புள்ள தங்கச் செயினை அடகு வைத்து, ரூ.1 லட்சம் வாங்கிச் சென்றனர். மறுநாள் கடையின் உரிமையாளர் கிருஷ்ணன் அந்த நகையை சோதனை செய்தபோது, அது போலி நகை என தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன், அந்த 2 பேர் கொடுத்த முகவரி மற்றும் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, அதுவும் போலி என தெரியவந்தது.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த கிருஷ்ணன், இதுகுறித்து வியாசர்பாடி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் தேடி வருகின்றனர்.