சென்னை: ஜனவரி 13ம் தேதியன்று, சென்னை, தீவுத் திடலில் ‘சென்னை சங்கமம்-2023’ நிகழ்வை நான் தொடங்கி வைக்கிறேன். அனைவரும் வாருங்கள் நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம் என முதல்வர் மு.க ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உரை: தனித்த அடையாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி தங்களது அடையாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்புதான் ‘சென்னை சங்கமம்’. தமிழினத் தலைவர் கலைஞர் ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திடும் விதத்தில் தற்போது “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13ம் நாள் தொடங்கி 17 ம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெறவிருக்கிறது.