மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடைக்குள் பெட்ரோல் குண்டுவீச்சு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மதுபாட்டில்கள் எரிந்து நாசமடைந்தன. கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை, வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் சூபர்வைசராக விஜய்ஆனந்த் (49) உள்ளார். நேற்று மாலை விற்பனையாளர்கள் குணசேகரன் (45), கரியபெட்டன் (54) ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பெட்ரோல் குண்டுகளை டாஸ்மாக் கடைக்குள் வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த பெட்ரோல் குண்டுகளால் கடையில் தீப்பற்றி எரிந்தது. உடனே விற்பனையாளர்கள் இருவரும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். அங்கு மது வாங்க நின்றிருந்தவர்களும் அலறியடித்து ஓடினர். டாஸ்மாக் கடை கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஏராளமான மது பாட்டில்கள் எரிந்து சேதமாகின. சிறுமுகை போலீசாரும், தீயணைப்பு படையினரும் வந்து தீயை அணைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு இதே கடை சூபர்வைசர் விஜய் ஆனந்த் வசூலான பணத்தை வங்கியில் செலுத்த பைக்கில் சென்றபோது அவரை கத்தியால் குத்தி வழிப்பறி முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: