கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் 22.04.2022 அன்று சட்டப்பேரவையில் ‘கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்’ என அறிவித்தார். அதன் அடிப்படையில், 2022ம் ஆண்டில் இருந்து சிறப்பாக செயல்புரிந்த 37 கிராம ஊராட்சிகளை மாவட்டத்திற்கு ஒன்று வீதம் தேர்வு செய்து ‘உத்தமர் காந்தி விருது’ வழங்குவதற்காக ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு https://tnrd.tn.gov.in/ இணையதள முகவரியினை பயன்படுத்திட உரிய பயனர் மற்றும் கடவுச் சொற்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை மதிப்பெண்கள் மூலம் பட்டியலிடப்பட்டு மாவட்டத்திற்கு 5 சிறந்த கிராம ஊராட்சிகள் வீதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநகரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களால் முன்மொழியப்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 சிறந்த கிராம ஊராட்சிகள் மாநில அளவில் இறுதி செய்யப்படும். அரசால் இறுதி செய்யப்பட்ட 37 கிராம ஊராட்சிகளுக்கு முதல்வரால் கேடயம், பாராட்டு சான்றிதழுடன் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இந்த விருதுக்கான இணையதள பதிவுகளை 17.01.2023க்குள் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: