புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் பந்த்: தமிழகஅரசு பேருந்து மீது கல்வீச்சு; கண்ணாடி உடைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி பந்த் அறிவித்த நிலையில், கடலூர் முதல் புதுச்சேரி வரை இயக்கப்பட்ட 2 தமிழகஅரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

மாநில அந்தஸ்துக்கான புதுச்சேரியில் அதிமுக எடப்பாடி அணியினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தராததால் புதுச்சேரியின் மைய பகுதியான நேரு வீதி பெரிய மார்க்கெட், காந்தி வீதி, உள்ளிட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கபட்டறிந்தன. மேலும் புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அதிமுக அழைப்பு விடுத்திருந்த பந்த் போராட்டத்திற்கு யாரும் ஆதரவு தராததால் இன்று பல்வேறு இடங்கள் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அதிகாலை எடப்பாடி அணியை சேர்ந்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனிடையே ஆபூர் சாலையில் பயணிகளை ஏற்றி சென்ற 2 டெம்போ வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் அந்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதேபோல் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த 2தமிழக அரசு பேருந்துகளின் பின் பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு சென்றனர். இதேபோல் கடலூர் நோக்கி மரபாலம் வழியாக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தையும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது.

இது தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 15 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதுபோல் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: