பைக் ஷோரூமில் போலியாக பில் தயாரித்து விற்ற விவகாரம் உயர் ரக பைக்குகளை வாங்கிய உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை-வேலூர் எஸ்பி அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு

வேலூர் : வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பைக் ஷோரூமின் மற்றொரு கிளை காட்பாடியில் இயங்கி வருகிறது. அங்கு வரகூர் அருகே உள்ள புதூரை சேர்ந்த பொற்செல்வன், சாய்நாதபுரம் விக்னேஷ், வண்டறந்தாங்கல் பிரசாந்த், கணியம்பாடி தினேஷ்குமார் ஆகிய 4 பேர் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை காட்பாடி கிளையில் 40 பைக்குகளை விற்றுள்ளனர். ஆனால் அதற்கான ₹70 லட்சம் தொகையை ஷோரூம் நிறுவன வங்கி கிளையில் செலுத்தாமல், போலி பில் தயாரித்து கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய வாகனங்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு வண்டி எண் கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்தனர்.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சாய்நாதபுரம் பைக் ஷோரூம் உரிமையாளரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது போலியாக பில் தயாரித்து, ₹70 லட்சத்தை கையாடல் விவரம் தெரிந்தது. இதுகுறித்து பைக் ஷோரூம் உரிமையாளர் வேதாராம் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். கையாடல் செய்ததாக பிரசாந்த், தினேஷ்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை கடந்த வாரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் இந்த ஷோரூமில் பைக்குகளை வாங்கிய உரிமையாளர்கள் தங்களது வானங்களை எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரப்படுத்த வேண்டும் என்று என்று தெரிவித்து இருந்தனர். இதையடுத்து நேற்று காலை உயர்ரக பைக்குகளுடன் உரிமையாளர்கள் வந்தனர். இதையடுத்து அவர்களின் வாகனங்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

பைக் ஷோரூமில் போலியாக பில் தயாரித்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த பைக் ஷோரூமில் பைக்குகள் வாங்கி சென்ற உரிமையாளர்கள் எவ்வளவு பணம் செலுத்தி வாங்கி உள்ளனர். எத்தனை பைக்குகளுக்கு இன்னும் பதிவு எண் கிடைக்கவில்லை. அதற்கான ஆவணத்தை சமர்பிக்கும் படி கூறியிருந்தோம். இது தொடர்பாக பைக் வாங்கி சென்ற உரிமையாளர்கள் பைக்குகளை போலீசார் முன்னிலையில் ஆஜரப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் அளித்த பணத்திற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. 18 பைக்குகள் உரிமையாளர்களிடம் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை முடிந்த பின்னர் பைக் உரிமையாளர்கள் வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் எஸ்பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: