மார்கழி மாத அமாவாசை; சதுரகிரி, ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி, ராமேஸ்வரத்தில் இன்று பக்தர்கள் குவிந்தனர். ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தல மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 21ம் தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இன்று மார்கழி மாத அமாவாசை என்பதால் சென்னை, கோவை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட தொலை ஊர்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் வந்த பக்தர்கள் அதிகாலை 1 மணி முதல் தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். இன்று காலை 6.40 மணிக்கு வனத்துறை கேட் திறந்துவிடப்பட்டது. பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அமாவாசையையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். இதுபோன்று ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அக்னிதீர்த்த கடலில் நீராடி ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.

Related Stories: