வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அதிபர் பைடனை சந்தித்து அவர் பேசினார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா அதிக அளவு உதவிகளை குவித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து கடந்த நவம்பர் 20ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மட்டும் சுமார் ரூ.1.53 ஆயிரம் கோடி ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். போர் தொடங்கியதற்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.