தூத்துக்குடியில் பரபரப்பு; ரூ.5 லட்சத்துக்கு குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 4 பேர் கைது: ஈரோட்டை சேர்ந்த 2 புரோக்கர்களுக்கு வலை

தூத்துக்குடி: குழந்தையை விற்பனை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணர். இவரது மனைவி மாரீஸ்வரி (22). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அவர் கணவரை விட்டுப் பிரிந்ததால் குழந்தையை வளர்க்க சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து குழந்தையை சில மாதங்களாக ஒரு காப்பகத்தில் ஒப்படைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாரீஸ்வரி, அந்த காப்பகத்தில் இருந்து மீண்டும் குழந்தையை வாங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் சிலர் குழந்தையை விற்பனையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்து தென்பாகம் தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுனர். குழந்தையை வாங்குவது போன்று புரோக்கர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினர். ரூ.5 லட்சம் தந்தால் குழந்தையை தருவதாக கூறிய அவர்கள், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே வரும்படி கூறிச் சென்றுள்ளார்.

போலீசார் அந்த கோயில் அருகே மப்டியில் காத்திருந்தனர். அப்போது, மாரீஸ்வரி  5 மாத குழந்தையுடன் அங்கு வந்துள்ளார். அவருடன், அவரது தாய் அய்யம்மாள் (40), மாரியப்பன் (44), சூரியம்மா என்ற சூரம்மா(75) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் குழந்தையை காண்பித்து பணம் கேட்டுள்ளனர். உடனடியாக போலீசார் மாரீஸ்வரி உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், தூத்துக்குடியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து ஈரோட்டைச் சேர்ந்த மேலும் 2 புரோக்கர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: