சாலிகிராமம் குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழில் நடத்திய 3 புரோக்கர்கள் சிக்கினர்: கர்நாடக இளம் பெண்கள் மீட்பு

சென்னை,: சாலிகிராமம் குடியிருப்பு பகுதியில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம், பாஸ்கர் நகர், பாரதிதாசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக வளசரவாக்கம் உதவி கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் பலர் அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்து சென்றது  தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது, ஜாபர்கான்பேட்டை திலகர் தெருவை சேர்ந்த வெஸ்லி (45) என்பவர், அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை லீசுக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (43), பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்த காட்சன் (32) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் பாலியல் புரோக்கர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories: