புதுடெல்லி: பீமா கோரேகாவ் வழக்கில் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமியை சிக்க வைக்க, ஹேக்கர்கள் மூலம் அவரது கம்ப்யூட்டரில் ஆதாரங்கள் திணிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. 2018ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகாவ்வில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமி(83), வழக்கு விசாரணையில் இருக்கும்போதே கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி மரணம் அடைந்தார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர், பழங்குடியினர் உரிமைக்காக போராடி வந்தவர். ஸ்டான் சுவாமி மற்றும் 15 பேர் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக என்ஐஏ குற்றம் சாட்டியிருந்தது. இவரது கம்ப்யூட்டரில் இருந்த மாவோயிஸ்ட் கடிதங்கள் வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக இருந்தன.