உலகளாவிய இயற்கை மீட்டெடுப்பு கங்கை தூய்மை திட்டத்துக்கு ஐநா அங்கீகாரம் வழங்கியது

மாண்ட்ரியல்: உலகளாவிய இயற்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இந்தியாவின் கங்கை தூய்மை திட்டத்தை அங்கீகரித்து ஐநா பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு பாராட்டியுள்ளது.  கனடாவில் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஐநா.வின் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் 15வது உச்சி மாநாடு கடந்த 7ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும் இந்த உச்சி மாநாடு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 முறையாக ஒத்திவைக்கப்பட்ட பிறகு தற்போது நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் உலகளாவிய அளவில் இயற்கையை மீட்டெடுக்கும் 10 முயற்சிகளை ஐநா அங்கீகரித்துள்ளது. இதில் இந்தியாவின் கங்கை தூய்மை திட்டமும் ஒன்றாகும்.  

இது குறித்து ஐநா பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், `இமயமலை முதல் வங்கக் கடல் வரையிலான 2,525 கி.மீ. தூரம் ஓடும் புனித கங்கை நதி மற்றும் அதன் கிளை நதிகளை தூய்மைபடுத்தும் இந்த திட்டத்தின் மூலம் அதனை சுற்றி வசிக்கும் 52 கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு பயனடைவார்கள்.  பருவநிலை மாறி வரும் இந்த கால கட்டத்தில், அழிந்து வரும் காட்டு விலங்கினங்கள், ஆற்று மீன்கள், ஆமைகள், நீர்நாய்கள் உள்ளிட்ட பல்லுயிர்களை மாசு மற்றும் கழிவுகளில் இருந்து காக்கும் இத்திட்டம் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டமாகும்,’ என்று அங்கீகரித்து ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது.

Related Stories: