மறைந்த பாடகரின் தந்தையின் பாதுகாவலர் மீது சக போலீஸ்காரர் துப்பாக்கிச்சூடு: பஞ்சாப்பில் பரபரப்பு

மான்சா: மறைந்த பஞ்சாப் பாடகரின் தந்தையின் பாதுகாவலர் மீது சக போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த சில மாதங்களுக்கு முன்  துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை பால்கவுர்  சிங்குக்கு ரவுடி கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள்  வந்தன.

அதனால் பஞ்சாப் காவல்துறை சார்பில் பால்கவுர் சிங்குக்கு நவ்ஜோத்  சிங் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இரண்டு துப்பாக்கி ஏந்திய  போலீஸ்காரர்களை பாதுகாப்புக்கு நியமித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு பாதுகாவலர்களும் அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது திடீரென குர்விந்தர் சிங் மீது நவ்ஜோத்  சிங் துப்பாக்கியால் சுட்டார்.

அதனால் குர்விந்தர் சிங்கின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு  மான்சா மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து  மான்சா துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் கோயல் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தில் குர்விந்தர் சிங்கின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. மற்றொரு போலீஸ்காரர் நவ்ஜோத் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கவனக்குறைவாக துப்பாக்கியை கையாண்டதால் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

Related Stories: