குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: குஜராத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 55 தொகுதிகளில் முன்னிலை..!

அகமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1 மற்றும் டிச.5ம் தேதிகளிலும், 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு நவ.12ம் தேதியுடம் தேர்தல் நடந்து முடிந்தது. இமாச்சலில் 76.44% வாக்குகளும்,  குஜராத்தில் முதல்கட்ட தேர்தலில் 63.31%  வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 65.22%  வாக்குகளும் பதிவாகி இருந்தன. இரண்டு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

குஜராத்தில் 37 மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க, 182 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும், 182 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக இரு மாநிலங்களில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் குஜராத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 55 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இமாச்சலில் பாஜக 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. பகல் 12 மணிக்குள் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரிய வரும். கருத்துக்கணிப்புகளில் குஜராத்தில் மீண்டும் பா.ஜ ஆட்சி அமைக்கும் என்றும், இமாச்சலபிரதேசத்தில் இழுபறி நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: