திருச்சி:திருச்சி காட்டூர் பாப்பாகுறிச்சியை சேர்ந்தவர் அசோக்குமார்(44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், திருவெறும்பூர் அருகே பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்தார். அதற்கு சந்தை மதிப்பாக ரூ. 1 லட்சம் நிர்ணயம் செய்து பத்திர பதிவு செய்ய திருவெறும்பூர் சார்பதிவாளர் பாஸ்கரனை(56) அணுகியுள்ளார். அப்போது அவர், அந்த நிலத்தை விவசாய நிலமாக 47 (A) படி பத்திரம் பதிவு செய்ய தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி அசோக்குமார் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையின் பேரில் சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.1 லட்சத்தை நேற்று அசோக்குமார் லஞ்சமாக கொடுத்தார் அப்போது மறைத்திருந்த போலீசார் சார்பதிவாளர் பாஸ்கரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.