கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கிய பின் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: லண்டன் குயின் மேரி பல்கலை தகவல்

லண்டன்: கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கிய பின்னர் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு வரும் வயதானவர்கள் இருமடங்கு ஆபத்துகளை சந்தித்து வருகின்றனர். ஆஸ்துமா நோயின் அறிகுறிகளும் முன்பைவிட அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களும், உலகளவில் 30 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்துமா நோய்க்கான முக்கிய அறிகுறிகளாக மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல், இருமல் ஆகியவற்றை குறிப்பிடலாம். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், மக்கள் முகக் கவசங்களை அணிவதை தவிர்த்துவிட்டனர். அதனால் சுவாச நோய்த்தொற்றுகள் பரவுகின்றன. மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைக் காட்டிலும் ெகாரோனாவால் ஏற்பட்டுள்ள ஆஸ்துமா முக்கியமானதாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் சுவாச தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரும், மருத்துவ பேராசிரியருமான அட்ரியன் மார்டினோ கூறுகையில், ‘கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் ஆஸ்துமா தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் காரணத்தையும்-விளைவையும் நிரூபிக்க முடியாது. முகக்கவசம் அணிதல், சுவாச நோய்களை கண்டறிந்து தடுத்தல் மூலமே ஆஸ்துமாவில் இருந்து தப்ப முடியும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: