புதுடெல்லி: இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதற்காக அல்கொய்தா அமைப்பின் ஆதரவு இணையதளத்திற்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘அல் கொய்தா’ என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய பிரிவாகக் கருதப்படும் இஸ்லாமிய மொழிபெயர்ப்பு மையம் (ஐடிசி), இந்தியாவிற்கு எதிராக ‘ஜிகாத்’ என்ற புதிய சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள தகவலில், ‘இந்திய முஸ்லீம் இளைஞர்களை ‘ஜிகாதி’ மீடியாவுடன் இணைக்கும் வகையில் ஐடிசியின் வெப் போர்டலில் சில தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த ஜிகாதி ஊடகத்தில், இந்திய முஸ்லீம் இளைஞர்கள் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முஸ்லிம் இளம் பெண்களும் இந்த போர்டலில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.