சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகள் தொடர்கிறது: சென்னை ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் போலீஸ் மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளை போலீஸ் தொடர்வது குறித்து, சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது பற்றி போலீஸ், மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் இணைந்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மாணவனுக்கு எதிராக சிதம்பரநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு மாணவியை அரசு நல காப்பகத்தில் அனுமதித்தனர். இதையடுத்து மாணவி மீட்க கேட்டு மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்கள் மூலம் உருவாகக்கூடிய அழுத்தம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இது போன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இருவரையும் கைது செய்ததன் மூலமாக என்ன சாதித்து விட்டீர்கள் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினார்கள்.

சிறார் சம்பந்தமான வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் மற்றும் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல்கள் ஆகியோர் இணைந்து ஆலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: