தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஐகோர்ட் ஓய்வு நீதிபதி தலைமையில் நடத்த கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன்  மூலமாக நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசும், மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு மருத்துவர்கள். நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவர்கள்.

 பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்கு உள்ள சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர். மருத்துவ கவுன்சிலில் வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவர்களிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த மூன்று தேர்தல்களில் இதே நடைமுறையை பின்பற்றி தகுதியான வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளனர்.  வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதால், ஜனவரி 19ஆம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழக்கு குறித்து  தமிழக அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் 2 வாரத்தில் பதிலளிக்குமாறு  உத்தரவிட்டு  விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: