வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவ.19, 20-ல் வட தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது. சிறிய இடைவேளைக்கு பிறகு கடந்த 10-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. கடந்த 3 நாட்களாக பரவலாக மழை குறைந்து இருந்தாலும், தென் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கன மழையும், மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது. 3 தினங்களுக்குள் புதுச்சேரி, தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி வரக்கூடும் என வானிலை மையம் கூறியது.

இதனால் தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவ.19, 20-ல் வட தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும், நவ.21,22-ல் வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவ இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: