தமிழ்நாட்டில் 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.32 கோடி மானியம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் சிறப்பான அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டு 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.32 கோடி மானியம் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது திறன்படைத்த மனித வளத்தை உருவாக்கி, தொழில் நிறுவனங்களின் தேவையினை பூர்த்தி செய்வததையும், அதிக அளவிலான சுயதொழில் தொடங்கும் திறமையினை பயிற்சியாளர்களுக்கு அளிப்பதையும்  நோக்கமாக கொண்டு செயலாற்றி வருகிறது.

இதன்மூலம், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல்  போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  இதன்படி மாநிலத்தில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.

மேலும், வரலாறு காணாத அளவில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் முதன்முறையாக 93.79% பயிற்சியாளர்கள்  சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்தேர்வில் 91% பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 74% பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த பெருமைக்குரியதாகும்.  

ஒன்றிய அரசானது  தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்காக தொழிற் துறை மதிப்பு விரிவாக்கத்திற்காக திறனை மேம்படுத்தும் திட்டமானது (Skill Strengthening for Industrial Value Enhancement- STRIVE) உலக வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 13 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், 3 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என ரூ.29.01 கோடி தொகை மானியம் ஒப்பளித்துள்ளது.

தற்போது ஒன்றிய அரசானது தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களும்  சிறப்பாக செயல்படுவதினை கருத்தில் கொண்டு  மேலும் 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தலா ரூ.2.00 கோடி வீதம் மொத்தம் ரூ.32.00 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணையினை பிறப்பித்துள்ளது.

Related Stories: