எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி மும்பை பள்ளி மாணவி சாதனை

ஜாம்ஷெட்பூர்: மும்பை கடற்படை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருபவர் காம்யா கார்த்திகேயன் (16). இவரது தந்தை கார்த்திகேயன் கடற்படையில் கமாண்டர் ஆக உள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறி ஏற்கனவே, பல சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியாவில் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் அறக்கட்டளை மாணவி காம்யா கார்த்திகேயனின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்தது. எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கான பயணத்தை கடந்த மார்ச் மாத இறுதியில் அவர் தொடங்கினார்.

7 வார கால பயணத்துக்கு பின்னர் மே 20ம் தேதி எவரெஸ்ட் மலையில் 8848 மீ உச்சியை காம்யாவும், கமாண்டர் கார்த்திகேயனும் அடைந்தனர். இதன் மூலம் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்த 2வது இளம் பெண் மற்றும் இந்தியாவின் முதல் இள வயது பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் என மேற்கு பிராந்திய கடற்படை டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 7 கண்டங்களில் மிக உயரமான சிகரங்களை காம்யா ஏறியுள்ளார். வரும் டிசம்பரில் அன்டார்ட்டிகாவில் உள்ள மிக உயரமான வின்சன் மாசிப் சிகரத்தில் ஏற உள்ளார். டாடா அட்வென்ச்சர் அறக்கட்டளையின் தலைவர் சாணக்கியா சவுத்ரி,‘‘சிறிய வயதில் இந்த சாதனையை படைத்தற்காக காம்யா கார்த்திகேயனுக்கு பாராட்டுகள். அவர் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்’’ என தெரிவித்துள்ளார்.

The post எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி மும்பை பள்ளி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: