சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் பேசிய வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நிலவுவதாக கூறினார். வடகிழக்கு பருவமழை, தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்ட பாலச்சந்திரன், 220 இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளதாக கூறினார். சீர்காழியில் மட்டும் 112 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது என்றார்.