ரிஷிவந்தியம் பகுதியில் நாளை இளைஞர் திறன் திருவிழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களை பற்றி அறிந்து கொள்வதோடு திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெறும் பொருட்டு இளைஞர்களின் திறனை மேம்படுவதற்காக திறன் பயிற்சி அளிக்கும் அரசுத்துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஊராட்சி ஒன்றிய அளவில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படவுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வட்டாரத்தில் அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நாளை 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில் 8ம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடைய 35 வயதுக்குட்பட்ட அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.

மேலும் பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பினை வழங்க ஏற்பாடு செய்யும். சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவத்தக்க அரசு திட்டங்கள் பற்றிய விவரங்களை இம்முகாமில் அறிந்து கொள்ளலாம். தகுதியான வேலைவாய்ப்பற்ற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வி தகுதி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: