திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் பெண் ஆடிட்டரை கொன்ற இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை: லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் பயங்கரம்

புனே: திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் லண்டனில் இருந்து திரும்பிய பெண் ஆடிட்டரை கொன்ற இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஸ்வேதா ரணவடே (26) என்ற பெண்  லண்டனில் பட்டயக் கணக்காளர் (சிஏ) படிப்பை முடித்துவிட்டு, கடந்த ஆகஸ்ட்  மாதம் புனே திரும்பினார். முன்னதாக இவர், ராஜ்குருநகரில் பேக்கேஜ்  செய்யப்பட்ட குடிநீர் ஆலை நடத்தி வரும் பொறியியல் பட்டதாரியான பிரதிக்  தமலே என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார்.  இருவரும் தூரத்து உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருதரப்பு பெற்றோரும் ஏற்பாடு  செய்திருந்தனர்.

ஆனால் திடீரென ஸ்வேதா ரணவடே, பிரதிக் தமலேவை திருமணம்  செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதற்கு அவர் கூறிய காரணம், ‘பிரதிக் தாமலே  ஒரு டென்ஷனான ஆள்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் லண்டனில் இருந்து ஸ்வேதா ரணவடே, கடைசி நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவரை கொல்ல பிரதிக் தமலே திட்டமிட்டார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் சதுஷ்ரிங்கி என்ற இடத்தில் வைத்து ஸ்வேதா ரணவடேவை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தலைமறைவானார். போலீசார் வழக்குப்பதிந்து குற்றம்சாட்டப்பட்ட பிரதிக் தமலேவை தேடி வந்தனர்.

இந்நிலையில், முல்ஷி அணை அருகே உள்ள காட்டில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதிக் தமலே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து பிரதிக் தமலேவின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், பெண் ஆடிட்டர் கொலையான சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: