கயத்தாறு அருகே பயங்கரம் மதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை

கயத்தாறு: கயத்தாறு அருகே மதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்தவர் கோடாங்கி மாரியப்பன் (53), மதிமுக ஒன்றிய விவசாய அணி செயலாளர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை மாரியப்பன், ஊருக்கு வடக்கே உள்ள தனது தோட்டத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாரியப்பன் அங்கேயே இறந்தார். கொலை நடந்த இடம் ஊருக்கு ஒதுக்குப்புறம் என்பதாலும், மாரியப்பன் உடல் கிடந்த இடம் சோளப் பயிர்களுக்கு இடையில் என்பதாலும் யாருக்கும் தெரியவில்லை. மாலை 3 மணியளவில் அவ்வழியாக சென்ற சிலர், மாரியப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கயத்தாறு போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: