உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகர சபை கூட்டம்: அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் பங்கேற்பு; பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகர சபை கூட்டம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். மாநிலம் முழுவதும் கூட்டம் நடைபெறும் இடங்களில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளை நேரில் சென்று கவனித்து அவற்றை நிறைவேற்றித் தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பணியாற்றுகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அவை முழு அளவில் செயல்பட்டு வருகின்றன. மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபைக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குடிநீர் வினியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறலாம். கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி உள்ளாட்சி தினமான இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் சபை கூட்டம் நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன.

இந்த கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்படும். இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை, உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கூட்டங்களில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று நடக்கும் கூட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் அமைச்சர்ர்களும் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: