துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் ஆளுநரையே சாரும்: மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தர்மபுரி: துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அது ஆளுநரையே சாரும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார். முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கேபி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி: பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார். ஆளுநரே தேர்வு செய்து அறிவிக்கிறார். இதில் அரசுக்கோ, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை.

அப்படி இருக்கிறபோது, தமிழகத்தில் தான் பணியாற்றிய காலத்தில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை பெற்றுக்கொண்டு துணைவேந்தரை நியமனம் செய்த நிலை இருந்தது என இன்றைய பஞ்சாப் ஆளுநர், பேசியது ஏற்ககூடியதாக இல்லை. பஞ்சாபில் அவர் துணைவேந்தரை நியமிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த தவறு நடந்தாலும் அந்த காலகட்டத்தில் ஆளுநராக பணியாற்றிய அவரையே சார்ந்தது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: