கோயம்பேட்டில் பரபரப்பு; தனியார் வாகன பார்க்கிங்கில் தொழிலதிபர் கொடூர கொலை: ரத்த காயங்களுடன் சடலம் மீட்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார் பார்க்கிங் இயங்கிவருகிறது. இங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில், கார் பார்க்கிங் வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு துப்புரவு பணியாளர் சென்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் முகம் சிதைக்கப்பட்டு உடல் முழுவதும் ரத்தகாயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவல்படி, பார்க்கிங் ஊழியர்கள் சென்று பார்த்துவிட்டு கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை நெற்குன்றம் மாதா கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார்(32) என்பதும் தொழிலதிபருமான இவர், டிராவல்ஸ் நடத்திவருவதும் தெரியவந்தது. தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா, வேறு ஏதாவது பிரச்னையா என்ற கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: