துபாயில் ரோஜர் பெடரர்: புதுப்பிக்கப்பட்ட டென்னிஸ் அகாடமியை பார்வையிட்டார்

துபாய்: முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், நேற்று துபாய் வந்தார். அங்குள்ள புகழ்பெற்ற டென்னிஸ் 360 அகாடமி தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆடவர் ஒற்றையர் டென்னிசில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், கடந்த மாதம் நடந்த ஏடிபி லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன், தனது ஓய்வை அறிவித்தார். ‘சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இனிமேல் பங்கேற்கப் போவதில்லை.

ஆனால் ஓய்வுக்கு பின்னரான எனது வாழ்க்கை டென்னிஸ் விளையாட்டுடன் இணைந்தே இருக்கும்’’ என்று அவர் கூறியுள்ளார். துபாயில் உள்ள புகழ்பெற்ற டென்னிஸ் 360 அகாடமியின் நிர்வாகிகள், தங்களது அகாடமிக்கு வருமாறு, கடந்த ஆண்டு ரோஜர் பெடரருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ‘நிச்சயம் வருகிறேன்’ என்று அவர்களிடம் பெடரர் உறுதியளித்திருந்தார். தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள அந்த டென்னிஸ் அகாடமியை பார்வையிடுவதற்காக நேற்று ரோஜர் பெடரர் துபாய் வந்தார்.

அகாடமியை பார்வையி்ட்ட பெடரர், தனக்கு இந்த பயணம் பயனுள்ள ஒன்று என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகாடமியின் சிஇஓ ஜ்வென் டான்-ஸ்ப்ரோல் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: ‘பெடரரின் இந்த வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்களது அகாடமி அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. அகாடமியில் அவர் இருந்தது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றி பெடரர்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: