தண்டையார்பேட்டை: வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயிலில், யார் ரூட் தல என்ற பிரச்னையில், ராயபுரம் ரயில் நிலையத்தில் கற்களை வீசி தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கல்லூரி மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 14ம்தேதி மதியம் சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் வந்த மாநிலக்கல்லூரி மாணவர்கள், ராயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கி கற்களை எடுத்து ரயில் உள்ளே இருந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது தாக்கினர். பதிலுக்கு உள்ளே இருந்த மாணவர்கள் கீழே இறங்கி கற்களை வீசி தாக்கினர். பின்னர் அதே ரயிலில் ஏறிச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் சென்றவுடன் ரயிலின் சங்கிலியை இழுத்து நிறுத்தினர்.