மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 11ம் தேதி விநாடிக்கு 30,000 கனஅடியாக வந்ததால், மேட்டூர் அணை நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. ஒகேனக்கல்லில் நேற்று காலை 78,000 கனஅடியாகவும், மாலையில் 1 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது.