மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 11ம் தேதி விநாடிக்கு 30,000 கனஅடியாக வந்ததால், மேட்டூர் அணை நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. ஒகேனக்கல்லில் நேற்று காலை 78,000 கனஅடியாகவும், மாலையில் 1 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 45,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 1,70,000 கனஅடியாக அதிகரித்தது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக 1,48,500கனஅடி வீதமும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: